வெள்ளி, 8 பிப்ரவரி, 2013



 முஸ்லிமின் வழிமுறை [பாகம்-3]

அல்லாஹ்வின் வார்த்தையுடன்…

அல்லாஹ்வின் வார்த்தையுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குகள்:

அல்லாஹ்வின் வார்த்தை பரிசுத்தமானது. மற்ற எல்லா வார்தைகளை விட மேலானதும் சிறப்பானதும் ஆகும். திருக்குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தையாகும். திருக்குர்ஆனின் கூற்றை கூறியவர் உண்மையைக் கூறியவராவார். திருக்குர்ஆனின்படி தீர்ப்பு வழங்கியவர் நீதமாக நடந்து கொண்டவராவார். திருக்குர்ஆனை அறிந்திருப்பவர்கள் அல்லாஹ்வுக்குரியவர்கள்; அவனுக்கே உரித்தானவர்கள். அதைப் பற்றிப் பிடித்துக் கொள்பவர்கள்.  தப்பித்துக் கொள்வார்கள்; வெற்றி பெறுவார்கள். அதனைப் புறக்கணிப்பவர்கள் பேரிழப்புகளுக்கு  ஆளாவார்கள்; அழிந்து போவார்கள் என ஒரு முஃமின் நம்ப வேண்டும்.

நபி(ஸல்) கூறினார்கள்: திருக்குர்ஆனை ஓதுங்கள். திண்ணமாக அது மறுமையில் அதை ஓதியவருக்கு பரிந்துரை செய்யக்கூடியதாக வரும். அறிவிப்பவர்: அபூ உமாமா(ரலி), முஸ்லீம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: திண்ணமாக மக்களில் அல்லாஹ்வுக்கென்று சிலர் இருக்கின்றனர். அவர்கள் குர்ஆனின்படி நடப்பவர்கள். அவர்களே அல்லாஹ்வுக்குரியவர்கள். அவனுக்கே உரித்தானவர்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: அஹ்மத், நஸயீ

திண்ணமாக இரும்பு துருப்பிடிப்பதுபோல உள்ளங்கள் துருப்பிடிக்கின்றன என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அதை நீக்குவது எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை ஓதுவதும் மரணத்தை நினைவு கூர்வதும்தான் என்று பதிலளித்தார்கள். (பைஹகீ)

எனவே ஒவ்வொரு முஸ்லிமும் திருக்குர்ஆன் எதை ஹலால் என்று கூறுகிறதோ அதை ஹலால் என்றும் எதை ஹராம் என்று கூறுகிறதோ அதை ஹராம் என்றும் கூறவேண்டும். மேலும் அது கூறும் ஒழுக்கங்களைக் கடைபிடிப்பதோடு அது கூறும் பண்புகளையும் மேற்கொள்ள வேண்டும். இன்னும் அதை ஒதும்போது பின்வரும் ஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும்:

உழுச் செய்து கொண்டு கிப்லாவை முன்னோக்கி மரியாதையோடும் கண்ணியத்தோடும் அமர்ந்து திருக்குர்ஆனை ஒதவேண்டும்.

அவசரப்படாமல் நிறுத்தி நிதானமாக ஓதவேண்டும். முழுக் குர்ஆனையும் மூன்று நாட்களுக்குக் குறைவாக ஓதக் கூடாது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்: யார் முழுக் குர்ஆனையும் மூன்று நாட்களுக்குக் குறைவாக ஓதிமுடிக்கின்றாரோ அவர் குர்ஆனை விளங்கவில்லை. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்: திர்மிதி, நஸயீ

ஓதும்போது பயபக்தியை மேற்கொள்ள வேண்டும்.

அழகிய ராகத்துடன் ஓதவேண்டும். ஏனெனில் “திருகுர்ஆனை அழகிய ராகத்துடன் ஓதுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அல்பர்ராஉ பின் ஆஸிப்(ரலி) நூல்: அஹ்மத், இப்னுமாஜா

தனக்கு முகஸ்துதி ஏற்பட்டுவிடும் என்றோ, தொழுது கொண்டிருப்பவருக்கு இடையூறாக இருக்கும் என்றோ அஞ்சினால் சப்தமில்லாமல் ஓதவேண்டும்.

அதன் அர்த்தங்களையும் உட்கருத்துக்களையும் விளங்கி சிந்தித்து, மனதை ஒரு நிலைப்படுத்தி ஓதவேண்டும்

திருகுர்ஆனை ஓதும்போது அலட்சியமாகவோ அதற்கு மாறுசெய்யும் விதமாகவோ நடந்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் இது சிலவேளை தன்னைத் தானே சபித்துக் கொள்வதற்க்கு காரணமாக ஆகிவிடும். ஆம்! ‘பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பணிந்து இறைஞ்சுவோம் ‘(3:61) என்ற வசனத்தையோ அல்லது ‘எச்சரிக்கை! அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்’ (11:18) என்ற வசனத்தையோ ஓதும்போது தானே அந்நிலையில் இருந்தால் அவன் தன்னைத் தானே சபித்துக் கொள்ளக்கூடியவனாக ஆகிவிடுகின்றான்.

குர்ஆனின்படி செயல்படுபவர்கள் ஆக முயற்சி செய்ய வேண்டும். அத்தகையோர்தான் அல்லாஹ்வுக்குரியவர்கள். அவனுக்கே உரித்தானவர்கள்.

நபி(ஸல்) அவர்களுடன் நடந்து கொள்ளும் முறை.

நபி (ஸல்)அவர்களுடன் ஒரு முழுமையான ஒழுங்குடன் நடந்து கொள்வது தன் கடமை என்பதை ஒரு முஸ்லிம் மனதார உணர்ந்து கொள்ளவேண்டும். இதற்குக் காரணம் இது தான்:

இவ்வொழுங்கை அல்லாஹ்தான் முஃமினான ஆண்,பெண் அனைவர் மீதும் கடமையாக்கி இருக்கின்றான். அல்லாஹ் கூறுகிறான்: முஃமின்களே! அல்லாஹ் மற்றும் அவன் தூதரின் முன்னிலையில் முந்தாதீர்கள்.(49:1)

“இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும் ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசிக்கொள்வதைப் போல் நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். இதனால் நீங்கள் செய்த செயல்கள் வீணாகிவிடும்; நீங்கள் அதனை அறியாத நிலையில்! (49:2)

அவர்களுக்குக் கட்டுப்படுவதையும் அவர்களை நேசிப்பதையும் அல்லாஹ்வே முஃமின்களுக்கு கடமையாக்கியுள்ளான்.

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள்.அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். உங்கள் செயல்களை பாழாக்கி விடாதீர்கள். (47:33)

இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுக்கிறாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதனை விட்டு விலகி இருங்கள். (59:7)

(நபியே! மக்களிடம்) நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் பெருங் கருணையுடைவனுமாவான். (3:31)

தன்னுடைய தந்தை, தன்னுடைய பிள்ளை இன்னும் பிற மக்கள் யாவரையும் விட ஒருவருக்கு நான் மிகப் பிரியமானவராக ஆகாதவரை உங்களில் யாரும் நம்பிக்கை கொண்டவராக ஆக மாட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்:புகாரி, முஸ்லிம்

என்றாலும் அவர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்கு எப்படி இருக்க வேண்டும்? அது எந்த வகையில் அமைய வேண்டும்?

அது, அவர்களுக்கு கீழ்ப்படிவதன் மூலமாக, மார்க்க மற்றும் உலகக் காரியங்கள் அனைத்திலும் அவர்களைப் பின்பற்றி நடப்பதன் மூலமாக அமைய வேண்டும்.

அவர்களை நேசிப்பதும், கண்ணியப்படுத்துவது, மதிப்பது ஆகியவற்றை விட வேறு யாருடைய நேசத்திற்கும் கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் முன்னுரிமை வழங்கக் கூடாது.

அவர்கள் நேசிக்கின்றவர்களை இவனும் நேசிக்க வேண்டும். அவர்கள் பகைக்கின்றவர்களை இவனும் பகைக்க வேண்டும். மேலும் அவர்கள் எதை விரும்புகின்றார்களோ அதை இவனும் விரும்பவேண்டும். அவர்கள் எதை வெறுக்கின்றார்களோ அதை இவனும் வெறுக்கவேண்டும்.

அவர்கள் கூறிய மார்க்க விஷயங்கள், உலகக் காரியங்கள் மற்றும் இம்மை, மறுமை பற்றிய மறைவான விஷயங்கள் ஆகியவற்றில் அவர்களை நம்பவேண்டும்.

அவர்களைப் பற்றிக் கூறப்படும்போது அவர்களைக் கண்ணியப்படுத்தும் முகமாக அவர்கள் மீது ஸலாத்தும் ஸலாமும் சொல்ல வேண்டும்.

அவர்களுடைய வழிமுறையை, மார்க்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் அவர்களுடைய பிரச்சாரத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுடைய அறிவுரைகளை எடுத்து நடக்க வேண்டும்.

மனதுடன் நடந்து கொள்ள வேண்டிய முறை.

ஒரு முஸ்லிம் இம்மை, மறுமையின் ஈடேற்றம் தன்னுடைய மனதைத் தூய்மைப்படுத்துவதில் – பண்படுத்துவதில் தான் இருக்கின்றது என்று நம்ப வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: மனதைத் தூய்மைப்படுத்தியவர் திண்ணமாக வெற்றியடைந்து விட்டார். அதனை நசுக்கியவர் திண்ணமாகத் தோற்றுவிட்டார். (91:9-10)

காலத்தின் மீது சத்தியமாக மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும் நற்செயல்கள் புரிந்து கொண்டும் மேலும் ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைபிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! (103:1-3)

எனது சமுதாயத்தினர் அனைவருமே சுவர்க்கம் செல்வார் (நிராகரிப்பவரைத் தவிர!) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! நிராகரிப்பவர் என்றால் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், எனக்குக் கீழ்படிந்தவர் சுவர்க்கம் செல்வார். எனக்கு மாறு செய்தவர் நிராகரிப்பவராவார் என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்:புகாரி

மனதைத் தூய்மைப்படுத்தி, பண்படுத்தக்கூடியது ஈமான்தான் என்று நம்புவதைப் போல அதை மாசுபடுத்தி பாழ்படுத்தக்கூடியது நிராகரிப்பை மேற்கொள்வதும் பாவம் செய்வதும்தான் எனவும் நம்ப வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: பகலில் இரு ஒரங்களிலும் இரவு சிறிது கழிந்த நேரத்திலும் தொழுகையை நிலை நாட்டுவீராக! திண்ணமாக நன்மைகள் தீமைகளைக் கழைந்து விடுகின்றன. (11:14) மேலும் அல்லாஹ் கூறுகிறான்: அப்படியல்ல! மாறாக உண்மை யாதெனில் அவர்களின் தீய செயல்களின் கறை அவர்களின் உள்ளங்களில் படிந்து விட்டிருக்கின்றது. (33:14)

இதனால்தான் முஸ்லிம் எப்போதும் தன் மனதைத் தூய்மைப்படுத்துவதிலும், பண்படுத்துவதிலும் ஈடுபடுவதோடு, நன்மை செய்வதற்கும் தீமையிலிருந்து விலகுவதற்கும் இராப்பகலாக அதனோடு போராடவும் வேண்டும். மேலும் ஒவ்வொரு நேரமும் சுய பரிசோதனை செய்து நற்செயல்கள் புரிவதற்கு மனதைத் தூண்ட வேண்டும். அதுபோல தீமைகளை விட்டும் மனதைத் திருப்பி, வழிபாட்டின் பால் செலுத்த வேண்டும். இதற்காக பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

1. பாவமன்னிப்புத் தேடுதல்

அதாவது அனைத்துப் பாவங்களை விட்டும் தவறுகளை விட்டும் விலகி, நடந்த தவறுகளுக்காக வருந்தி இனிமேல் மீண்டும் அதுபோன்ற பாவங்களைச் செய்யாமலிருக்க உறுதிகொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்விடம் தூய்மையான பாவமன்னிப்பைக் கோருங்கள், இறைவன் உங்கள் பாவங்களைப் போக்கி சுவனச்சோலைகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். (66:18)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் இரவில் தனது கையை நீட்டுகிறான். பகலில் பாவம் செய்தவர் மன்னிப்புக் கோருவதற்காக. பகலில் தனது கையை நீட்டுகிறான். இரவில் பாவம் செய்தவர் மன்னிப்புக் கேட்பதற்காக. சூரியன் மேற்கிலிருந்து உதையமாகும்வரை இவ்வாறே செய்து கொண்டிருப்பான். அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்:முஸ்லிம்

2. இறைவனின் கண்காணிப்பை மனதிற்கொள்ளுதல்.

அதாவது வாழ்கையின் ஒவ்வொரு நொடியும் இறைவன் தன்னைக் கண்காணித்துக் கொண்டிருகின்றான் என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும். மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். தனது இரகசியங்களையும் பரகசியங்களையும் அறிந்து கொள்கின்றான் என்பதையும் அவன் அறிந்துகொள்ள வேண்டும்.

இதனால் அவனது உள்ளம் இறைவனின் கண்காணிப்பை உறுதி கொள்ளக்கூடியதாக, அவனை நினைவு கூறும்போது ஒரு பிரியத்தை உணரக்கூடியதாக, அவனுக்கு கட்டுப்பட்டு நடக்கும்போது ஒரு சுகத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக, அவனை விடுத்து ஏனைய அனைத்தையும் புறக்கணித்துவிட்டு அவன் பக்கமே திரும்பக்கூடியதாக ஆகிவிடுகின்றது. பின்வரும் வசனங்களின் கருத்தும் இதுதான்.

எவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு தனது நடத்தையையும் நல்லதாக்கிக் கொண்டு ஒரு மனப்பட்டு இப்ராஹீமின் வழிமுறையையும் பின்பற்றினாரோ அவரை விடச் சிறந்த வாழ்க்கை நெறியுடையவர் யார்? (4:125)

(நபியே!) நீர் எந்த நிலையிலிருந்தாலும் குர்ஆனிலிருந்து எதை நீர் ஒதிக் காண்பித்தாலும் (மக்களே!) நீங்களும் எச்செயலை செய்து கொண்டிருந்தாலும் அதை நீங்கள் செய்து கொண்டிருக்கும்போதே நாம் உங்களைப் பார்த்துக் கொண்டுதானிருக்கின்றோம். (10:61)

நீ அல்லாஹ்வை வணங்கும்போது அவனை நீ பார்த்துக் கொண்டிருப்பதுபோல வணங்க வேண்டும். அவனை நீ பார்க்க முடியாவிட்டாலும் அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர்(ரழி), நூல்:முஸ்லிம்

3. சுய பரிசோதனை

முஸ்லிம் மறுமையில் தனக்கு நற்பேறு கிடைக்க வேண்டுமென்பதற்காகவும் அங்கு கிடைக்கும் நற்கூலிக்கும் இறைவனின் திருப்பொருத்ததிற்கும் தன்னைத் தகுதியாக்கிக் கொள்வதற்காகவும் இவ்வுலகில் (அதுதான் அவன் செயல்படுவதற்குத் தகுந்த களம்) இரவு பகலாகச் செயல்படும்போது ஒரு வியாபாரியைப் போல செயல்பட வேண்டும்.

அதாவது தன் மீதுள்ள கடமையான வணக்கங்களை மூலதனமாகவும் நஃபிலான வணக்கங்களை மூலதனத்திற்கு மேல் கிடைக்கின்ற இலாபங்களாகவும் தவறுகளையும் பாவங்களையும் நஷ்டங்களாகவும் கருதி செயல்பட வேண்டும். பிறகு அவ்வப்போது தனியாக அமர்ந்து இன்றைய தினம் தாம் என்ன செய்தோம் என்று சுய பிரிசோதனை செய்து பார்க்க வேண்டும்

கடமைகளில் ஏதாவது குறை ஏற்பட்டிருந்தால் தன்னைத்தானே பழித்துக் கொண்டு உடனடியாக அக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். அக்குறை களாச் செய்யப்படக் கூடியதாக இருந்தால் அதைக் களாச்செய்து விட வேண்டும். களாச் செய்யப்படக் கூடியதாக இல்லையென்றால் நஃபில்களை அதிகமாகச் செய்து சரிசெய்து விட வேண்டும். நஃபில்களில் ஏதாவது குறை ஏற்பட்டிருந்தால் திரும்பவும் அந்த நஃபில்கலைச் செய்து சரிசெய்து விட வேண்டும். ஹராமான காரியங்களைச் செய்து நஷ்டம் ஏற்பட்டிந்தால் அதற்காக வருந்தி இறைவனிடத்தில் பாவமன்னிப்புத் தேடி அவனிடமே திரும்பிவிட வேண்டும். அத்துடன் தான் செய்த தீமைக்குப் பொருத்தமான நன்மையைச் செய்து கொள்ள வேண்டும். சுய பரிசோதனையின் கருத்து இதுதான்.

அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் ஒவ்வொரு மனிதனும் நாளைய தினத்திற்காக எதைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று பார்க்கட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் அறிபவனாக இருக்கின்றான். (59:18)

உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் விசாரணை செய்யப்படுவதற்கு முன் உங்களை நீங்களே விசாரணை செய்து கொள்ளுங்கள். (அஹ்மத்)

4. மனதோடு போராடுதல்.

தன்னுடைய விரோதிகளிலேயே கொடிய விரோதி தனது மனம்தான் என்பதை முஸ்லிம் புரிந்துகொள்ள வேண்டும். இயல்பாகவே அது நன்மையை வெறுத்து தீமையை விரும்பக்கூடியதாகவும் தீயவற்றை அதிகம் தூண்டக்கூடியதாகவும் இருக்கின்றது. மேலும் மனம் எப்போதும் தனக்கு ஓய்வையும் சுகத்தையுமே விரும்பும். இச்சைகளின் மீதே மோகம் கொள்ளும். அவற்றில் தனக்குக் கெடுதியிருந்தாலும் சரியே!

இதை ஒரு முஸ்லிம் புரிந்து கொண்ட பிறகு நன்மைகளைச் செய்வதற்கும் தீமைகளை விட்டு விலகுவதற்கும் தன் மனதோடு போராட வேண்டும்.

எவர்கள் நமக்காக போரடுகின்றார்களோ அவர்களுக்கு நாம் நம்முடைய வழிகளைக் காண்பிப்போம். திண்ணமாக அல்லாஹ் நன்மை செய்பவர்களுடன் இருக்கின்றான். (29:69)

இதுதான் நல்லோர்களின் வழிமுறையாகும். முஃமின்கள் மற்றும் வாய்மையாளர்களின் வழிமுறையும் இதுவே.

நபி(ஸல்) அவர்கள் இரவில் தம் கால்கள் வீங்கும் அளவுக்கு தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?! எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்:புகாரி,முஸ்லிம்

பெற்றோருக்குரிய கடமைகள்

ஒரு முஸ்லிம் தன் மீதுள்ள பெற்றோருக்குரிய உரிமைகளையும் அவர்களுக்கு நன்மை செய்வது, கட்டுப்படுவது மற்றும் உபகாரம் செய்வதன் கடமையையும் நம்ப வேண்டும். இது அவன் இவ்வுலகில் தோன்றுவதற்கு அவர்கள் காரணமாக இருந்தார்கள் என்பதற்காகவோ அல்லது அவனுக்கு அவர்கள் செய்த நன்மைக்காக அவன் கைமாறு செய்யக் கடமைப்பட்டிருக்கிறான் என்பதற்காகவோ அல்ல. மாறாக அவர்களுக்கு கட்டுப்படுவதை அல்லாஹ் கடமையாக்கி இருக்கின்றான் என்பதற்காகத்தான்.

அல்லாஹ் கூறுகிறான்: அவனையன்றி வேறெவரையும் நீங்கள் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டுமென்றும் உமது இறைவன் விதித்திருக்கிறான் (அல்குர்ஆன்: 17:23)

பாவங்களில் மிகப்பெரும் பாவம் எது? என்பதை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என நபி( ஸல்) அவர்கள் கேட்டபோது நபித்தோழர்கள் ஆம் என்றனர். உடனே நபி(ஸல்) அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோருக்கு மாறுசெய்வது, பொய் சாட்சி சொல்வது ஆகியவையாகும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா(ரலி), நூல்:புகாரி, முஸ்லிம்.

அல்லாஹ்விற்க்கு மிக விருப்பமான செயல் எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்குவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும் என பதிலளித்தார்கள். அதற்கடுத்தது எது? என்றேன். பெற்றோருக்கு நன்மை செய்வது என்றார்கள். அதற்கடுத்தது எது? என்று கேட்டேன். அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) புகாரி, முஸ்லிம்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஜிஹாத் செய்வதற்கு அனுமதி கேட்டார். அதற்கவர்கள் உன் பெற்றோர் உயிருடன் இருக்கின்றார்களா? என்று கேட்டார்கள். அவர் ‘ஆம்’ என்றதும் அவர்களிடம் ஜிஹாத் (பணிவிடை) செய்வீராக! என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

முஸ்லிம் பெறோருக்குரிய இக்கடமைகளை ஏற்று அல்லாஹ்வுக்கு வழிப்படும் பொருட்டும் அவனது அறிவுரைகளை நடைமுறைப் படுத்தும் பொருட்டும் அதனை முழுமையாக நிறைவேற்றும்போது அவர்கள் விஷயத்தில் பின்வரும் ஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும்.

அல்லாஹ்வுக்கு  மாறு செய்யாத, அவனது ஷரீஅத்திற்கு முரணில்லாத விஷயங்களில் பெற்றோர் ஏவுகின்ற, விலக்குகின்ற அனைத்து விஷயங்களிலும் அவர்களுக்கு கட்டுப்பட வேண்டும். ஏனெனில் படைத்துவனுக்கு மாறு செய்யும் விஷயத்தில் எந்தப் படைப்புக்கும் கட்டுப்படுதல் கூடாது.

அல்லாஹ் கூறுகிறான்: எதனை நீ அறியமாட்டாயோ அதனை என்னோடு நீ இணைகற்பிக்க வேண்டுமென்று அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் அவர்களுக்கு நீ ஒருபோதும் கட்டுப்படவேண்டாம். (அல்குர்ஆன்: 31:15)

நபி(ஸல்)கூறினார்கள்: படைத்துவனுக்கு மாறு செய்யும் விஷயத்தில் எந்தப் படைப்புக்கும் கட்டுப்படுதல் கூடாது. நூல்:அஹ்மத், தப்ரானி

அவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டும். அவர்களிடத்தில் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். இன்னும் அவர்களிடம் கனிவுடனும் கருணையுடனும் நடந்துகொள்ளல் வேண்டும். சொல்லாலும் செயலாலும் அவர்களிடம் கண்னியமாக நடந்துகொள்ள வேண்டும். தனது குரலை அவர்களின் குரலுக்கு மேல் உயர்த்தக் கூடாது

அவர்களுக்கு முன்னால் நடக்கவும் கூடாது. அவர்களை விட தன் மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ முன்னுரிமை வழங்கக் கூடாது. அவர்களின் அனுமதியும் திருப்தியுமின்றி பயணம் மேற்கொள்ளக் கூடாது.

அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பது, அவர்களுக்கு மருத்துவம் செய்வது, துன்பங்கள் தொல்லைகள் நேராமல் பார்த்துக்கொள்வது, தன்னையே அவர்களுக்காக அர்ப்பணிப்பது போன்ற பல்வேறு நன்மைகளையும் நல்லுபகாரங்களையும் தன்னால் இயன்ற அளவு அவர்களுக்கு செய்ய வேண்டும்.

அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யவேண்டும், பாவமன்னிப்பு தேட வேண்டும். இன்னும் அவர்களின் நண்பர்களைக் கண்ணியப்படுத்த வேண்டும்.

பிள்ளைகளுக்குரிய கடமைகள்.

ஒரு தந்தைக்கு தன் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன என்பதையும் ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது அந்த குழந்தையின் தாயை அவர் தேர்ந்தெடுப்பதில் இருந்து அக்குழந்தைக்கு அழகிய பெயர் சூட்டுவது, குழந்தை பிறந்த ஏழாம் நாளில் அகீகா கொடுப்பது, கத்னா செய்வது, அவர்களிடம் அன்பு செலுத்துவது, மென்மையாக நடந்து கொள்வது, அவர்களுக்குச் செலவு செய்வது, சிறந்த ஒழுக்கப் பயிற்சி அளிப்பது, அவர்களைப் பண்படுத்துவது, பக்குவப்படுத்துவது, அவர்களுக்கு மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுப்பது, ஃபர்லுகளையும் சுன்னத்துகளையும் இஸ்லாமிய ஒழுக்கங்களையும் நிறைவேற்றுவதற்குப் பயிற்சி கொடுப்பதுவரை அனைத்தும் அடங்கும்.

அவகளுக்குத் திருமணமாகின்ற வரை இவ்வனைத்தும் தந்தையின் கடமையாகும். அவர்களுக்குத் திருமணம் ஆகி விட்டால் அவர்களை அவர்கள் இஷ்டத்திற்கு விட்டு விட வேண்டும். விரும்பினால் அவர்கள் தந்தையின் பராமரிப்பில் இருக்கலாம். அல்லது தனியாகச் சென்று விடலாம்.

இதற்கான ஆதாரங்கள் வருமாறு: தம் குழந்தைகளுக்குப் பால் குடியைப் பூர்த்தியாக்க வேண்டும் என்று தந்தையர்களில் யாராவது விரும்பினால் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு இரண்டாண்டு காலம் முழுமையாகப் பாலூட்ட வேண்டும். இந்நிலையில் அத்தாய்மார்களுக்கு நல்லமுறையில் உணவளிப்பதும் உடையளிப்பதும் குழந்தைகளின் தந்தையர்க்குரிய பொறுப்பாகும். (அல்குர்ஆன்: 2:233)

இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருளாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 66:6). வறுமைக்கு அஞ்சி உங்கள் பிள்ளைகளை கொலை செய்யாதீர்! நாம்தாம் அவர்களுக்கும் உணவளிக்கிறோம் உங்களுக்கும் உணவளிக்கிறோம். (அல்குர்ஆன்: 17:31)

நபி(ஸல்) கூறினார்கள்: ஒவ்வொரு குழந்தையும் அகீகாவுக்குப் பொறுப்பாக்கப் பட்டுள்ளது. அதன் சார்பில் ஏழாம் நாள் அகீகா கொடுத்து, பெயர் சூட்ட வேண்டும். தலை முடியை மழித்துவிட வேண்டும். அறிவிப்பவர்:ஸமுரா(ரழி), நூல்: திர்மிதி, இப்னு மாஜா.

குழந்தைகளுக்கு அன்பளிப்பு வழங்கும்போது அவர்களிடம் சமமாக நடந்துகொள்ளுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல்:பைஹகி, தப்ரானி.

உங்கள் குழந்தைகள் ஏழு வயதை அடையும்போது அவர்களை தொழும்படி ஏவுங்கள். பத்து வயதை அடைந்ததும் தொழாமலிருந்தால் அவர்களை அடியுங்கள். படுக்கைகளில் அவர்களைப் பிரித்து வையுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி) நூல்: அபூதாவூத், தப்ரானி.

சகோதரர்களிடம் நடந்து கொள்வது.

ஒரு முஸ்லிம் தன் தந்தையிடம் பிள்ளையிடமும் நடந்து கொள்ள வேண்டிய அதே ஒழுங்கோடு தன் சகோதரர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும். இது விஷயத்தில் அவர்கள் அனைவரும் சமம் என்று கருத வேண்டும். எனவே இளைய சகோதரர்கள் தம் மூத்த சகோதரர்களிடம் தம் தந்தையிடம் நடந்து கொள்வதைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். மூத்த சகோதரர்கள் தம் இளைய சகோதரர்களிடம் தம் தந்தையின் பிள்ளைகளிடம் நடந்து கொள்வதைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குரிய உரிமைகள், கடமைகள், ஒழுக்கங்கள் ஆகிய எல்லா விஷயத்திலும் இவ்வாறே நடந்து கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உன் தாய் பிறகு உன் தந்தை பிறகு உனது சகோதரி பிறகு உனது சகோதரர் ஆகியோரிடத்திலும் பிறகு அடுத்தடுத்து வரக்கூடிய உன் நெருங்கிய உறவினரிடத்திலும் நீ நல்ல முறையில் நடந்து கொள். நூல்:பஸ்ஸார், தைலமி (இந்த ஹதீஸ் பலவீனமானது).

நன்றி: இஸ்லாம்குரல்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக