முஸ்லிமின் வழிமுறை [பாகம்-2]
நபித்தோழர்களை நேசிப்பது.
நபித்தோழர்களையும், நபியின் குடும்பத்தார்களையும் நேசிப்பது கடமை என்றும், அவர்கள் மற்ற முஃமின்கள், முஸ்லிம்களை விட சிறந்தவர்கள் என்றும் ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். சிறப்பில் அவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு உண்டு. இஸ்லாத்தை முதன் முதலில் ஏற்றுக் கொண்டதைப் பொருத்துத்தான் அவர்களுடைய உயர் அந்தஸ்து இருக்கும்.
அவர்களில் சிறந்தவர்கள் நேர்வழி பெற்ற கலீஃபாக்கள். அடுத்து சொர்க்கம் குறித்து நற்செய்தி கூறப்பட்ட பத்து பேர்கள். அவர்கள் நேர்வழி பெற்ற நான்கு கலீஃபாக்கள், தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி), ஸுபைர் பின் அவாம் (ரலி), ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி), ஸயீத் பின் ஸைத் (ரலி), அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோர். அதற்கடுத்து பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள். அதற்கடுத்து மேற்கூறப்பட்ட பத்து பேர்கள் அல்லாமல் சொர்க்கம் குறித்து நற்செய்தி கூறப்பட்ட இன்னும் சிலர். உதாரணம்: பாத்திமா (ரலி), அவர்களின் மக்களான ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி), மேலும் ஸாபித் பின் கைஸ் (ரலி), பிலால் பின் ரிபாஹ் (ரலி) மற்றும் சிலர்.
இவ்வாறே இஸ்லாத்திற்காகப் பாடுபட்ட இமாம்களைக் கண்ணியப்படுத்துவதும், மதிப்பதும் கடமை என்றும் நம்ப வேண்டும்.
அவர்கள் யாரெனில், ஸஹாபாக்களை அடுத்தடுத்த காலங்களில் வாழ்ந்த, திருக்குர்ஆனை நன்கு அறிந்த, அதை மனனம் செய்து அதை அழகிய முறையில் ஓதக்கூடிய காரிகள், ஃபிக்ஹ் மற்றும் ஹதீஸ் கலை வல்லுநர்கள், திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் போன்றவர்கள்.
நபித்தோழர்கள், நபியின் குடும்பத்தினர்.
ஒரு முஸ்லிம் அவர்களை நேசிக்க வேண்டும். அல்லாஹ்வும் அவன் தூதரும் அவர்களை நேசிப்பதால்.
அவர்கள் ஏனைய முஃமின்கள், முஸ்லிம்களை விடச் சிறந்தவர்கள் என நம்ப வேண்டும்.
ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: “(இஸ்லாத்தின் அழைப்புக்கு) முதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள், அன்ஸாரிகளைக் குறித்தும், அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் திருப்திக் கொண்டான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தியடைந்தார்கள்.” (அல்குர்ஆன்: 9:100)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘என்னுடைய தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் (உங்களில்) ஒருவர் உஹத் மலை அளவு தங்கத்தை (இறைவழியில்) செலவு செய்தாலும், அவர்களில் ஒருவர் செலவு செய்த ஒரு முத்து அல்லது அதில் பாதி அளவைக் கூட அவரால் அடைந்து விட முடியாது.’ அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.
பொதுவாக ஸஹாபாக்களில் சிறந்தவர் அபூபக்கர் (ரலி) அடுத்தடுத்து உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) என்று கருத வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் உயிரோடி இருக்கும்போது (ஸஹாபாக்களில் சிறந்தவர்கள்) முதலில் அபூபக்கர் (ரலி), பிறகு உமர் (ரலி), பிறகு உஸ்மான் (ரலி) அதன் பிறகு அலீ (ரலி) என்று தான் நாங்கள் கூறி வந்தோம். இது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்ததும் அவர்கள் இதை மறுக்கவில்லை. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி.
அவர்களின் தவறுகளை எடுத்துச் சொல்வதும் அவர்களுக்கிடையே நடந்த கருத்து வேறுபாடுகளைக் கூறுவதும் கூடாது.
நபி (ஸல்) அவர்களின் மனைவியரின் கண்ணியத்தையும் நம்ப வேண்டும். அவர்கள் பரிசுத்தமானவர்கள்; (அவதூறுகளை விட்டும்) தூய்மைப்படுத்தப்பட்டவர்கள். மேலும் அவர்களில் சிறந்தவர் கதீஜா (ரலி), ஆயிஷா (ரலி) என்றும் கருத வேண்டும்.
காரிகள், ஃபிக்ஹ், ஹதீஸ் கலை வல்லுனர்கள்.
ஒரு முஸ்லிம் அவர்களை நேசிக்க வேண்டும். அவர்களுக்காக அருளை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் சிறப்பை ஒப்புக் கொள்ள வேண்டும்.
அவர்களைப் பற்றி நல்லதையே கூற வேண்டும். அவர்களைப் பற்றி குறை கூறவோ தப்பபிப்ராயம் கொள்ளவோ கூடாது. திண்ணமாக அவர்கள் அல்லாஹ்வுக்காகவே தூய உள்ளத்தோடு (குர்ஆன், ஹதீஸை) ஆய்வு செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்குப் பின் வந்தவர்களின் கருத்தை விடவும் அவர்களின் கருத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அல்லாஹ்வுடைய, அவன் தூதருடைய அல்லது நபித்தோழர்களுடைய கூற்றுக்காகவே அன்றி அவர்களுடைய கூற்றை விட்டு விடக்கூடாது.
இமாம் மாலிக் (ரஹ்), இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் அஹ்மத் (ரஹ்), இமாம் அபூஹனீஃபா (ரஹ்) ஆகிய நான்கு இமாம்கள் தொகுத்த நூல்களும், அவர்கள் கூறிய மார்க்க சம்பந்தமான விஷயங்கள், ஃபிக்ஹ் மற்றும் ஷரீஅத் சட்டங்கள் அனைத்தும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழியிலிருந்து பெறப்பட்டதே. இவ்விரு அடிப்படை ஆதாரங்களிலிருந்து அவர்கள் விளங்கியதைத் தவிர அல்லது இவ்விரண்டிலிருந்து அவர்கள் ஆய்வு செய்து பெற்றதைத் தவிர அல்லது இவ்விரண்டையும் ஒப்பு நோக்குவதன் (கியாஸ்) மூலம் பெறப்பட்டதைத் தவிர வேறெதுவும் அவர்களிடம் இல்லை.
அவர்கள் மனிதர்கள்தாம். அவர்கள் சரியாகச் சொல்லியிருக்கலாம். தவறாகவும் சொல்லியிருக்கலாம் என்று கருத வேண்டும். சிலவேளை அவர்கள் ஏதாவது ஒரு சட்டத்தில் உண்மைக்குப் புறம்பாக சொல்லியிருக்கலாம். இது வேண்டுமென்றே அல்ல. மாறாக மறதியாக அல்லது பாராமுகமாக அல்லது ஆழ்ந்த ஆய்வின்றி அவ்வாறு சொல்லியிருக்கலாம். இதனால்தான் ஒரு முஸ்லிம் அவர்களில் ஒருவருடைய கருத்தை விட்டுவிட்டு இன்னொருவரது கருத்தை மாத்திரம் பலமாகப் பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. மாறாக அவர்களில் எவரது கருத்தையும் அவர் எடுத்துக் கொள்ளலாம்.
அதிகாரம் வகிப்பவர்கள்.
ஒரு முஸ்லிம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதை கடமை என்று கருத வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். மேலும் உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் (கீழ்ப்படியுங்கள்) (அல்குர்ஆன்: 4:56)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அதிகாரம் உடையவர்களுக்கு) நீங்கள் செவிசாயுங்கள்; கட்டுப்படுங்கள். உலர்ந்த திராட்சையைப் போன்ற தலையுடைய ஒரு நீக்ரோ அடிமை உங்களுக்குத் தலைவரானாலும் சரியே. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி
ஆயினும் அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் அவர்களுக்குக் கட்டுப்படுதல் கூடாது. ஏனெனில் அவர்களுக்குக் கட்டுப்படுவதை விட அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். ‘படைத்தவனுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் எந்தப் படைப்பினங்களுக்கும் கட்டுப்படுதல் கூடாது’ என்பது நபிமொழி. (அஹ்மத்)
அவர்களுக்கு எதிராக செயல்படுவதும் பகிரங்கமாக அவர்களுக்கு மாறுசெய்வதும் ஹராம் என்று கருத வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன்னுடைய அமீரிடம் ஒருவர் தான் விரும்பாததைக் கண்டால் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதிகாரம் வகிப்பவருக்கு கட்டுப்படுவதை விட்டும் ஒருவர் ஒரு ஜான் வெளியேறிவிட்டால் அவர் அறியாமைக் காலத்தவர் மரணித்ததைப் போல் மரணிப்பார். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.
இறைவா! அவர்களைச் சரியாகவும் நேர்மையாகவும் நடக்க வைப்பாயாக. அதற்கு நீ உதவி செய்வாயாக. தீமையை விட்டும் அவர்களைப் பாதுகாப்பாயாக என்று இறைவனிடம் அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்கள் சீராக நடந்தால் தான் சமுதாயம் சீராக இருக்கும். அவர்கள் சீர்கெட்டுப் போய்விட்டால் சமுதாயமும் சீர்கெட்டுப் போய்விடும்.
அவர்கள் பாவமான, ஹராமான காரியங்களைச் செய்தாலும் – அவர்கள் இறைநிராகரிப்புக் காரியங்களைச் செய்யாதவரை அவர்களுக்குப் பின்னால் நின்று தொழ வேண்டும். அவர்களோடு சேர்ந்து ஜிஹாதும் செய்ய வேண்டும். ஏனெனில் ‘அதிகாரம் வகிப்பவர்களின் சொல்லைக் கேளுங்கள்; அவர்களுக்குக் கட்டுப்படுங்கள்; அவர்கள் மீது சுமத்தப்பட்ட கடமைக்கு அவர்களே பொறுப்பு. உங்கள் மீது சுமத்தப்பட்ட கடமைக்கு நீங்களே பொறுப்பு!’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல்கமா (ரலி) அவர்கள் தம் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம்.
உப்பாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் பின்வருமாறு உறுதிப் பிரமாணம் எடுத்துக் கொண்டோம். அதாவது நாங்கள் உற்சாகமாக இருக்கும்போதும் சோம்பலுடம் இருக்கும்போதும் கஷ்டமான நேரத்திலும் இலேசான நேரத்திலும், எங்கள் உரிமை பறிக்கப்படும் போதும் அதிகாரம் வகிப்பவர்களுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்; அவர்களுடைய சொல்லைக் கேட்போம்; அதிகாரம் குறித்து அவர்களிடம் தர்க்கம் செய்ய மாட்டோம். தெளிவான இறைநிராகரிப்பை அவர்களிடம் நாங்கள் கண்டால் ஒழிய. நூல்: புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வுடன்…
அல்லாஹ்வுடன் நடந்து கொள்ளவேண்டிய ஒழுங்குகள்:
ஒரு முஸ்லிம் தன் தாயின் கருவறையில் இந்திரியத் துளியாக இருந்ததிலிருந்து அல்லாஹ் அவனுக்கு அருளிய அருட்கொடைகளை (இவ்வருட்கொடைகள் நாளை மறுமையில் அவன் இறைவனைச் சந்திக்கும்வரை அவனுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும்) எண்ணிப் பார்த்து அதற்காக வல்ல நாயனுக்கு, அவனை தனது நாவால் புகழ்ந்து, துதிபாடி, தன் அவயங்களை அவனுடைய வழிபாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் நன்றி செலுத்தவேண்டும்.
இதுதான் அல்லாஹ்வுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கமாகும். காரணம், அருட்கொடைளை அள்ளித் தந்தவனுடைய சிறப்பை மறுப்பதும் அவற்றுக்கு நன்றி கொல்வதும் ஒழுங்கல்லவே!
அல்லாஹ் கூறுகிறான்: உங்களுக்குக் கிடைத்துள்ள அருட்கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம். (16:52)
அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணி முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது. (16:18)
மேலும் கூறுகிறான்: என்னை நீங்கள் நினைவு கூருங்கள். நானும் உங்களை நினைவு கூறுகின்றேன். (2:152)
தன்னையும் தன்னுடைய எல்லா நிலைமைகளையும் அல்லாஹ் சூழ்ந்தறிபவனாய் இருக்கின்றான் என்பதை ஒரு முஸ்லிம் உணர வேண்டும். அப்போதுதான் அவனுடைய உள்ளத்தில் அல்லாஹ்வைப் பற்றிய பயம், மதிப்பு மற்றும் கண்ணியம் ஏற்படும். அதனால் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதற்கும் அவனுக்கு கட்டுப்படாமல் இருப்பதற்கும் அவன் வெட்கப்படுவான்.
இது அல்லாஹ்வுடன் நடந்துகொள்ள வேண்டிய ஒழுக்கமாகும். ஏனெனில் ஒரு அடிமை தன் எஜமானுக்கு (அவனோ தன்னைச் சூழ்ந்தறிந்து கொண்டிருக்கிற நிலையில்) பகிரங்கமாக மாறுசெய்வதும் தீமைகளை, மோசமான காரியங்களைச் செய்வதும் ஒழுக்கமாக இருக்க முடியாதல்லவா?
அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் இரகசியமாய்ச் செய்வதையும் வெளிப்படையாய்ச் செய்வதையும் அல்லாஹ் நன்கறிகின்றான். (16:19)
அல்லாஹ் தன் மீது முழு ஆற்றல் பெற்றிருக்கிறான். அவனை விட்டால் தனக்கு வேறு புகலிடமோ, ஒதுங்குமிடமோ, தப்பிக்குமிடமோ கிடையாது என்பதையும் ஒரு முஸ்லிம் உணர வேண்டும். தனது காரியங்களை அவனிடமே ஒப்படைத்து அவன் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும். இதுவும் அவன், அவனைப் படைத்த இறைவனுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கமே. ஏனெனில் புகலிடம் அளிக்க முடியாதவரிடம் புகலிடம் தேடுவதும் தவக்குல் வைக்க முடியாதவரிடம் தவக்குல் வைப்பதும் ஒழுங்காக இருக்க முடியாது.
அல்லாஹ் கூறுகிறான்: எந்த உயிரினமானாலும் அதன் குடுமி அவனுடைய பிடியிலேயே உள்ளது. (11:56)
நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே தவக்குல் வையுங்கள். (5:23)
தனக்கும் ஏனைய படைப்பினங்களுக்கும் அல்லாஹ் அருளிய அருட்கொடைகளை சிந்தித்துப் பார்த்து மென்மேலும் அவை தனக்குக் கிடைக்க வேண்டும் என ஆவல் கொள்ளவேண்டும்.
நன்றி: இஸ்லாம்குரல்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக