ஞாயிறு, 16 செப்டம்பர், 2012



இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம் - 1
P. ஜைனுல் ஆப்தீன் அவர்களின் நூலிலிருந்து 

முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பாழாக்குவதில் பில்லி சூனியம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

திருக்குர் ஆனையும், உரிய முறையில் நபிமொழிகளையும் சிந்தித்தால் பில்லி சூனியம் என்பது ஏமாற்றும் தந்திர வித்தை தவிர வேறில்லை என்பதை அறியலாம்.

ஈமான் தொடர்புடைய பிரச்சனையாக இது உள்ளதால் இது பற்றி முழுமையாக ஆய்வு செய்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதால் கீழ்க்காணும் தலைப்புக்களில் பில்லி சூனியம் பற்றி விரிவாக அலசும் நூல்

இறைத்தூதர்களுக்கு சூனியக்காரர் என்ற பட்டம்
மூஸா நபியும் அற்புதங்களும்
ஈஸா நபியும் அற்புதங்களும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அற்புதங்களும்
மூஸா நபியின் காலத்தில்...
சூனியத்தை உண்மை எனக் கூறுவோரின் ஆதாரங்கள்
நபிகள் நாயகத்துக்கு சூனியம்
பாதுகாக்கப்பட்ட இறை வேதம்
எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?
இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர்
இறைத்தூதர்கள் என்பதற்கான சான்றுகள்
சூனியம் வைக்கப்பட்டவர் அல்லர்
ஹதீஸ்களும் மார்க்க ஆதாரங்களே!
முரண்பட்ட அறிவிப்புக்கள்
113, 114வது அத்தியாயங்கள்
முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்
தவறான மொழிபெயர்ப்பு
சரியான மொழி பெயர்ப்பு
ஹாரூத் மாரூத்

இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்
'ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ, உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும்' என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்கையுடையோர் கனிசமான எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். இது பில்லி, சூனியம், ஏவல், செய்வினை என்று பல்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகின்றது.
'ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ, வேதனையையோ ஏற்படுத்த முடியும்' என்பதை நாம் நம்பலாம். கண் கூடாக இது தெரிவதால் இதற்கு மார்க்கத்தின் அடிப்படையில் எந்த ஆதாரத்தையும் நாம் தேட வேண்டியதில்லை.

ஆனால் புறச் சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.

திருக்குர்ஆனிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளிலும் இது பற்றி கூறப்படுவது என்ன என்பதை நாம் மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கும் இடம் தருவது போல் அமைந்துள்ளன.

இதன் காரணமாகத் தான் முஸ்லிம் அறிஞர்களும் இந்த விஷயத்தில் முரண்பட்டு நிற்கின்றனர்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கு இடமிருப்பது போல் தோன்றினாலும் கவனமாக ஆராயும் போது ஒரு கருத்து தான் சரியானது என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.

'மக்களை ஏமாற்றுவதற்காகவும், கவர்வதற்காகவும் செய்து காட்டப்படும் தந்திர வித்தைகள் தான் சூனியம்; உண்மையில் சூனியத்தின் மூலமாக எந்த அதிசயமும் நிகழ்வதில்லை' என்பது தான் சரியான அந்த முடிவாகும்.

சூனியம் என்பதற்கு அரபு மொழியில் ஸிஹ்ர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இந்தச் சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை நாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தால் ஸிஹ்ர் என்பது பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றும் தந்திர வித்தை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

இறைத்தூதர்களுக்கு சூனியக்காரர் என்ற பட்டம்

மக்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு தம்மை இறைத் தூதர்கள் என்று நிரூபிக்க சில அற்புதங்களை இறைவன் வழங்கினான்.

உதாரணமாக மூஸா நபியவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது கைத்தடியைக் கீழே போட்டவுடன் அது சீறும் பாம்பாக உருமாறியது. கைத்தடி பாம்பாக உருமாறிய நிலையில் அதைத் தொட்டுப் பார்த்தாலும், எந்த வகையான சோதனைக்கு உட்படுத்தினாலும் அது பாம்பு தான்' என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகும். இது தான் அற்புதம் எனப்படுவது.
கைத்தடி பாம்பு போல் தோற்றமளித்து அதைத் தொட்டுப் பார்த்தாலோ, சோதனைக்கு உட்படுத்தினாலோ அது கைத்தடியாக இருந்தால், நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது தெரிய வந்தால் அதைத் தந்திர வித்தை - மேஜிக் எனக் கூறுவோம்.

இறைத் தூதர்கள் செய்து காட்டிய அற்புதம் முதல் வகையிலானது. அதில் எந்த விதமான தில்லுமுல்லும், ஏமாற்றுதலும் கிடையாது.

ஆனாலும் இறைத் தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்கும் அற்புதங்களைச் செய்து காட்டிய போது அதனை அந்த மக்கள் அற்புதம் என்று நம்பவில்லை. மாறாக 'இவர் நமக்குத் தெரியாத வகையில் ஏதோ தந்திரம் செய்கிறார்; நம்மை ஏமாற்றுகிறார்' என்று அவர்கள் நினைத்தனர்.
இதைக் குறிப்பிட ஸிஹ்ர் - சூனியம் என்ற சொல்லையே அவர்கள் பயன்படுத்தினார்கள்.

இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ சூனியக்காரர் (ஸிஹ்ர் செய்பவர்) என்றோ கூறாமல் இருந்ததில்லை. திருக்குர்ஆன் 51:52

ஸிஹ்ர் என்ற சொல்லுக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட அற்புதம்' என்பது பொருள் என்றால் இறைத் தூதர்களை நிராகரிப்பதற்கு ஸிஹ்ர் என்ற காரணத்தைக் கூறியிருக்க மாட்டார்கள்.

'இவர் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. தந்திரம் செய்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறார். நடக்காததை நடந்தது போல் நம்ப வைக்கிறார்' என்ற கருத்தை உள்ளடக்கித் தான் நபிமார்களின் அற்புதங்களை ஸிஹ்ர் (சூனியம்) எனக் குறிப்பிட்டு நிராகரித்தனர்.

மூஸா நபியும் அற்புதங்களும்

மூஸா நபியவர்களுக்கு மகத்தான அற்புதங்கள் சிலவற்றை இறைவன் வழங்கி இருந்தான். அந்த அற்புதங்களை ஏற்க மறுத்தவர்கள் அவற்றை ஸிஹ்ர் எனக் கூறியே நிராகரித்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.

அப்போது அவர் தமது கைத் தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது. 'இவர் தேர்ந்த சூனியக்காரராக (ஸிஹ்ர் செய்பவராக) உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?' என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 7:107, 108, 109

அவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் நமது சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் செய்த கூட்டமாக இருந்தனர். நம்மிடமிருந்து அவர்களுக்கு உண்மை வந்த போது 'இது தெளிவான சூனியம் (ஸிஹ்ர்)' என்றனர். 'உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் (ஸிஹ்ர்) என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் (ஸிஹ்ர் செய்பவர்கள்) வெற்றி பெற மாட்டார்கள்' என்று மூஸா கூறினார். திருக்குர்ஆன் 10:75, 76, 77

'நீர் உண்மையாளராக இருந்தால் அதைக் கொண்டு வாரும்' என்று அவன் கூறினான். அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது பெரிய பாம்பாக ஆனது. தமது கையை வெளிப்படுத்தினார். அது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்தது. 'இவர் திறமை மிக்க சூனியக்காரர் (ஸிஹ்ர் செய்பவர்)' என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் அவன் கூறினான். 'தனது (ஸிஹ்ர்) சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்? (என்றும் கேட்டான்). திருக்குர்ஆன் 26:31, 32, 33, 34, 35

மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது 'இது இட்டுக்கட்டப்பட்ட (ஸிஹ்ர்) சூனியம் தவிர வேறில்லை; இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை' என்றனர். திருக்குர்ஆன் 28:36

மூஸாவிடமும் (படிப்பினை) இருக்கிறது. அவரைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் அனுப்பிய போது, அவன் தனது பலத்தின் காரணமாகப் புறக்கணித்தான். 'இவர் சூனியக்காரரோ (ஸிஹ்ர் செய்பவரோ) பைத்தியக்காரரோ' எனக் கூறினான். திருக்குர்ஆன் 51:38, 39

உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக வெளிப்படும். ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்திடமும் ஒன்பது சான்றுகளுடன் (செல்வீராக!) அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவுள்ளனர் (என்றான்). நமது சான்றுகள் பார்க்கக் கூடிய வகையில் அவர்களிடம் வந்த போது 'இது தெளிவான சூனியம் (ஸிஹ்ர்)' என்று அவர்கள் கூறினர். அவர்கள் அதை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும், ஆணவமாகவும் மறுத்தனர். 'குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?' என்று கவனிப்பீராக! திருக்குர்ஆன் 27:12, 13, 14

மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். 'பெரும் பொய்யரான சூனியக்காரர்' என்று அவர்கள் கூறினர். திருக்குர்ஆன் 40:24

மூஸா நபி கொண்டு வந்த அற்புதங்களை நிராகரிக்க ஸிஹ்ர் எனும் சொல்லை அவர்கள் பயன்படுத்தியதிலிருந்து ஸிஹ்ர் என்றால் தந்திரம் தான். உண்மையில் ஏதும் நடப்பதில்லை என்று அறிந்து கொள்கிறோம்.
இந்த இடத்தில் சிலர் ஒரு சந்தேகத்தை எழுப்புவார்கள்
.
ஸிஹ்ர் என்ற சொல்லை பித்தலாட்டம் என்ற பொருளில் இறைத் தூதரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பயன்படுத்தியதாகத் தான் மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. ஸிஹ்ர் என்ற சொல்லை இறைவன் தனது சொல்லாகப் பயன்படுத்தவில்லை. இறைத் தூதர்களின் எதிரிகள் பயன்படுத்திய சொல்லை எடுத்துக் காட்டுகிறான்.

எனவே இதை ஆதாரமாகக் கொண்டு ஸிஹ்ர் என்பது உண்மையில்லை என்று எவ்வாறு வாதிடலாம் என்பது தான் அந்தச் சந்தேகம்.

இந்தச் சந்தேகத்திற்கு மேலே நாம் சுட்டிக் காட்டிய 10:77 வசனத்தில் தெளிவான விளக்கம் உள்ளது.

மூஸா நபி கொண்டு வந்த அற்புதத்தை ஸிஹ்ர் எனக் கூறி அம்மக்கள் மறுத்த போது மூஸா நபியர்கள் பின்வருமாறு எதிர்க் கேள்வி எழுப்பியதாக 10:77 வசனம் கூறுகிறது.

உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் (ஸிஹ்ர்) என்று கூறுகிறீர்களா?

இவ்வாறு மூஸா நபியவர்கள் உண்மைக்கு எதிர்ப் பதமாக ஸிஹ்ர் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள். உண்மையை நீங்கள் எப்படி (ஸிஹ்ர்) பித்தலாட்டம் என்று கூறலாம் என்று இறைத் தூதர் கேள்வி எழுப்பியதால் ஸிஹ்ர் என்பது ஏமாற்றும் வித்தை தான்; உண்மையானது அல்ல என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

ஈஸா நபியும் அற்புதங்களும்

மூஸா நபியைப் போலவே ஈஸா நபியும் அதிகமான அற்புதங்களைச் செய்து காட்டினார்கள். அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைப் பார்த்த பின்னரும் அதை உண்மை என்று அவரது சமுதாயத்தினர் நம்பவில்லை. இவர் ஏதோ தந்திரம் செய்கிறார்' என்று தான் நினைத்தனர். இவர் ஸிஹ்ர் செய்கிறார் (தந்திரம் செய்கிறார்)' எனக் கூறி நிராகரித்து விட்டனர்.

'மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட் கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீ ராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களி டம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடை யவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீ ராக! இறந்தோரை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப் படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது 'இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை' என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக! என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக! திருக்குர்ஆன் 5:110

'இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது 'இது தெளிவான சூனியம்' எனக் கூறினர். திருக்குர்ஆன் 61:6

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அற்புதங்களும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத் தூதர் என்று நிரூபிப்பதற்காக இறைவன் வழங்கிய சில அற்புதங்களைச் செய்து காட்டினார்கள். மாபெரும் அற்புதமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆனையும் மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார்கள்.

அவர்கள் செய்து காட்டிய உண்மையான அற்புதங்களை ஏற்க மறுத்த எதிரிகள் அவற்றை ஸிஹ்ர் (சூனியம்) எனக் கூறினார்கள்.

(முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும். 'இது வெளிப்படையான சூனியத்தைத் தவிர வேறு இல்லை' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள். திருக்குர்ஆன் 6:7

மக்களை எச்சரிப்பீராக' என்றும், நம்பிக்கை கொண்டோருக்குத் தம் இறைவனிடம் அவர்கள் செய்த நற்செயல் (அதற்கான கூலி) உண்டு என நற்செய்தி கூறுவீராக' என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? 'இவர் தேர்ந்த சூனியக்காரர்' என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். திருக்குர்ஆன் 10:2

அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. 'இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?' என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர். திருக்குர்ஆன் 21:3

நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்த போது 'மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்றது இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா?' எனக் கூறுகின்றனர். இதற்கு முன் மூஸாவுக்கு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா? 'இரண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் சூனியங்களே' என்று கூறுகின்றனர். 'அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம்' எனவும் கூறுகின்றனர். திருக்குர்ஆன் 28:48

நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் 'இவர் உங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு உங்களைத் தடுக்க நினைக்கும் மனி தராகவே இருக்கிறார்' எனக் கூறுகின்றனர். 'இது இட்டுக்கட்டப்பட்ட அவதூறு தான்' எனவும் கூறுகின்றனர். தங்களிடம் உண்மை வந்த போது இது தெளிவான சூனியம் தவிர வேறு இல்லை என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். திருக்குர்ஆன் 34:43

சான்றை அவர்கள் கண்ட போதும் கேலி செய்கின்றனர். 'இது தெளிவான சூனியம் தவிர வேறில்லை' என்று அவர்கள் கூறுகின்றனர். திருக்குர்ஆன் 37:14, 15

அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர். 'இவர் பொய்யர், சூனியக்காரர்' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறினர்.
திருக்குர்ஆன் 38:4

அவர்களிடம் உண்மை வந்த போது 'இது சூனியம், இதை நாங்கள் மறுப்பவர்கள்' எனக் கூறினர். திருக்குர்ஆன் 43:30

இவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் தம்மிடம் வந்த சத்தியத்தை மறுப்போர் 'இது தெளிவான சூனியம்' என்று கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 46:7

அவர்கள் சான்றைக் கண்டால் 'இது தொடர்ந்து நடக்கும் சூனியம்' எனக் கூறிப் புறக்கணிக்கின்றனர். திருக்குர்ஆன் 54:2

தொடரும்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக