ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!
பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A
அல்லாஹ்வின்
அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்!
ஆவலுடன்
எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்!
இறைவனுடன்
இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்!
ஈகையை
ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்!
உயர்
பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்!
ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை
உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்!
எத்தகைய
இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்!
ஏழ்மையை
விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்!
ஐயங்கள்
நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்!
ஒற்றுமையை
ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்!
ஓரிறைக்
கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்...
நம்மை
நோக்கி தன் ஒளிக்கதிர்களை பதிக்க விரைவில் வர இருக்கின்றது.
சுட்டெரிக்கும்
சூரியனின் வெப்பக்கதிர்கள் நம்மை தாக்க வரும்போது நிழல் தேடி அலைவது போல் நம்
பாவங்களை கருக வைக்கும் தீப்பிழம்பாய் ரமழான் வருகிறது. அருள்மறையை அருளிய
அருளாளனின் அன்பு மாதம் நம்மை அரவணைத்துச் செல்ல அண்மையில் வந்துகொண்டிருக்கிறது.
ஏக
வல்லோன் அல்லாஹ்விடம் நெருங்க வைக்கும் மேலதிக வணக்க வழிபாடுகள் செய்ய
வழிவகுக்கும் வரப்பிரசாதம் இந்த ரமழான்.
இறை
நம்பிக்கைக் கொண்டோர் தம் உள்ளங்களால் எண்ணிய அனைத்து நற்செயல்களுக்கும்
வழிதிறக்கும் அற்புத மாதம்.
இறைவனிடம்
அருள் வேண்டும் முதல் பத்து தினங்களை உள்ளடக்கிய அருள் மாதம் அழகாக வருகின்றது.
பாவ
மன்னிப்பு கோரும் நெஞ்சங்களில் பால்வார்க்கும் புண்ணிய மாதம் இரண்டாம் பத்து
தினங்களுடன் புதையலாக வருகின்றது.
நரக
நெருப்பின் விடுதலையை வேண்டி நிற்கும் நல்லோர்களின் நம்பிக்கை மாதம்,
சுவனத்தில்
நுழைய துடிக்கும் சுந்தர நபிகளின் உம்மத்துகள் சுற்றும் சூழ காண துடிக்கும்
சூப்பர் மாதம்
முத்தான
மூன்றாம் பத்து தினங்களுடனே முன்னறிவிப்புடன் வருகின்றது.
உள்ளத்தால்
அன்பை விதைத்து, உடலால் பணிவை வெளி கொணர்ந்து மக்களிடம்
கருணையை அறுவடை செய்யும் காலம் ரமழான் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
ஆன்மீக
பயிற்சிக்கு அடிகோலும் அற்புத வாய்ப்பை அள்ளி வழங்கிடும் மாதம்!
இறைவனின்
வற்றாத கருணையான ரஹ்மத்தையும், ஊற்றுக்கண்ணாக
விளங்கும் பரக்கத்தையும் ஒருசேர வாரி வழங்கிடும் வள்ளல் மாதம்.
செய்த
குற்றங்கள் சிறியதாயினும்,
பெரியதாயினும் மன்னிப்பின் வாசல்
திறக்கப்பட்டு பாவிகளுக்கு பாவமன்னிப்பு பகிர்ந்திடும் படைத்தவனின் மாதம்.
நினைத்த
காரியங்கள் தடையின்றி நடைபெற நம்முடைய இருகரமேந்திய பிரார்த்தனை அவசியம், அப் பிரார்த்தனை பரிசீலனைக்கு
எடுத்துக் கொள்ளப்பட்டு உடனடியாக பதிலளிக்கப்படும் பண்புள்ள மாதம்.
நாம்
படைக்கப்படுவதற்கு முன்னர்,
மனிதனையா படைக்கப் போகிறாய்? என்று ஆச்சரிய வினா தொடுத்த வானவர்கள்
நம் செயல்களைக் கண்டு, வியந்து இறைவனிடம் பெருமை பாராட்டி
பெருமிதப்படுத்தும் பேருள்ள மாதம்.
நம்மை
வழிகெடுக்கும் நாசகார, தீய சக்திகளான ஷைத்தான்கள்
விலங்கிடப்பட்டு கொட்டிலில் அடைக்கப்படும் காருண்ய மாதம்.
இணையில்லா
இறைவனின் எல்லையில்லா கூலி வழங்கப்படும் மாதம்.
நோன்பாளிகள்
மட்டும்... என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டுள்ள உயர்தர சுவனத்தில் நாம் நோன்பாளி
என்ற பெருமையுடன் நுழைய வைக்கும் மாதம்.
சுகந்த
காற்று வீசும் வசந்த கால திறப்பு போல சுவனக்காற்றை வீச வானங்கள் மற்றும்
சுவனங்களின் திறப்பு விழா நடைபெறும் விழாக்கா(கோ)லம்.
கோடைகால
வெப்பத்தையே தாங்க முடியாத நமக்கு நரகத்தின் கொடுமையை தாங்க முடியுமா? அதற்கு முடிவுகட்டும் விதமாக
முடிவில்லாத முன்னவன் அல்லாஹ்வின் முன்னேற்பாடு தான் இந்த ரமழான்.
ஆம்! இந்த வசந்த
காலத்தில் நரகச்சூடு நம்மைத் தொட அனுமதியில்லை. எங்கும் எப்போதும் சுகம்! அதுதான்
இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரம்!! அதற்காகத்தான் இந்த மாதத்தில் மூடப்படும்
நரகம்!!!
ஓராயிரம்
இரவுகள் விழித்திருந்தால்தான் ஒருசில நன்மைகளை பெற முடியும் என்ற வாழ்க்கைச்
சூழலில் ஓரிரவு விழித்திருந்தாலே போதும் ஓராயிரம் இரவுகள் செய்த செயல்களுக்குண்டான
நன்மைகளை சம்பாதித்துக் கொள்ளலாம் என்ற சுபச் செய்தியுடன் லைல(த்)துல் கத்ர் என்ற
புதையலை தன்னுள் வைத்திருக்கும் அருள் சுரங்கம்.
வாடிய
பயிரை கண்டபோது வாடுவதை விட அதற்கு தண்ணீர் வார்ப்பது மேலான செயல் என்பது போல
வறியோருக்கும், எளியோருக்கும், இல்லாதோருக்கும்
வாரி வழங்கி கொடைத்தன்மையையும், வள்ளல்
குணத்தையும் வாஞ்சையுடன் கற்றுத்தரும் வளமிகு மாதம்.
நாம்
மட்டும் நன்மைகள் பல செய்து, தீமைகளை
விட்டும் தவிர்ந்திருந்தால் போதுமா? பிறருக்கும் நல்லவற்றை போதிக்க
வேண்டாமா? தீமையை விட்டும் தடுக்க வேண்டாமா?
அந்தப்
புனிதப் பணியை வழங்கும் பயிற்சிக்களம்தான்
இந்த ரமழான்.
அடுத்தவருக்கு
அநீதி இழைத்தல் ஆபத்தானது என்பதை அனைவருக்கும் அறிவுறுத்தும் அழகிய மாதம்.
பிறரின்
தேவைகளை அறிந்து முடிந்தளவு உதவிகள் புரிய உள்ளத்தில் உதவிப்பண்பை ஊற்றெடுக்க
வைக்கும் உன்னத மாதம்.
கஸ்தூரி
மணம் கமழும் மணப்பொருளை விட நோன்பாளியின் வாய் வாடை வல்லோன் விரும்பும் வாசனை
என்பதை வலியுறுத்தும் வசந்த மாதம்.
உலக
காரியங்களில் போட்டியிட்டால் வெற்றியாளர் ஒருவரே! மற்ற அனைவரும் தோல்வியுற்றோர்
என்பது நாம் அறிந்த நியதி. ஆனால், இம்மாதத்தில்
நற்செயல்களில் போட்டியிடுவோர் அனைவரும் வெற்றியாளர்கள் என்பதும், தோல்வியில்லா வாழ்க்கையும், துவண்டு போகாத நிம்மதியும் கிடைக்கும்
என்பதும் வெற்றியளிக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதி என்பதை உணர்த்தும் மாதம்.
வழிபாடுகள்
என்ற குறைவான மூலதனம். இறைபொருத்தம் மற்றும் சுவனம் என்ற இலாபம் மட்டுமே! வேறு
எந்தவித நஷ்டமும் இல்லை என்ற புதுவித வியாபார உத்தியை கற்றுக்கொடுக்கும் கல்வி
மாதம்.
இறுதியாக..
இறையச்சம்
என்னும் தக்வாவை நம் உள்ளங்களில் உறையவைக்க உண்மையாளன் அல்லாஹ் உம்மி நபி
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உம்மத்திற்கு வகுத்தளித்த செயல்முறை
திட்டம்.
அம்மாதத்தில் நாம் செய்ய வேண்டியது நோன்பு நோற்பது மட்டும்
தானா...?
இறைவன்
மீது முழு நம்பிக்கை வைத்து. நன்மைகளை எதிர்பார்த்து நோன்பு நோற்க வேண்டும். அதே
அடிப்படையில் இரவு வணக்கங்களை நிறைவேற்ற வேண்டும்.
இவ்விரண்டு செயற்பாடுகளும்
நம்முடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.
ஐவேளை
தொழுகைகளையும் பள்ளிவாசலுக்கு சென்று கூட்டா(ஜமாஅத்தா)க நிறைவேற்ற வேண்டும். இது
கூட்டு வாழ்க்கை முறையையும். சகோதர பாசத்தையும் பலப்படுத்த உதவி செய்யும்.
தினந்தோறும்
திருக்குர்ஆனை உள்ளச்சத்துடன். பொருள் விளங்கி, ஓத
வேண்டிய முறையில் ஓத வேண்டும். இது இறைவனின் கருணையும். மன நிம்மதியும் ஏற்பட
வழிவகுக்கும்.
இஸ்லாமிய
அறிவை கற்றுக்கொள்ள அல்லது கற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். இது ஈருலுக
வெற்றிக்குண்டான பாதையை திறந்து வைக்கும்.
இரவு
வணக்கம் என்ற தராவீஹ் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகளை அதிகமாக தொடர்ந்து தொழுது வர
வேண்டும். இவை இறைவனின் நெருக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த வழிமுறையாகும்.
உறவுமுறையை
பேணி வாழ வேண்டும். இது குடும்ப சீரமைப்பிற்கும். சொந்தங்கள் சேர்ந்து
வாழ்வதற்கும் சீரான வழியை காட்டும்.
இல்லாருக்கும்.
எளியோருக்கும் முடிந்த வரை உதவிகள் புரிய வேண்டும். இது பிறர் மீது அன்பு
செலுத்துதல் என்ற மேலான குணத்தை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைக்கும்
அன்பின்
இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளே...! தயாராகுவோம் நாம்...!
இறைவழிபாட்டில்
திளைத்திருப்போம்! இறைமறை குர்ஆனை ஓதுவதில் மூழ்கியிருப்போம்!
வீண்
பேச்சுகளை தவிர்ந்திருப்போம்! வீணாணவைகளை விட்டும் ஒதுங்கியிருப்போம்!
பகல்
முழுவதும் பசித்திருந்து நோன்பிருப்போம்! இரவு முழுவதும் விழித்திருந்து இறையைத்
தொழுவோம்!
புனித
ரமழானில் புதையலைத் தேடிப் புறப்படுவோம்! நாளை மறுமையில் பொன்னான வாழ்வை
சென்றடைவோம்!
இங்கே
நாள்தோறும் நன்மைகள் பல புரிவோம்! ஈருலகிலும் நாயன் அல்லாஹ்வின் அருளைப் பெற
முயற்சிப்போம்!
அல்குர்ஆனின்
வழிமுறையில் செல்வோம்! அல்லாஹ்வின் அளவிலா அருளைப் பெறுவோம்!
சுன்னத்தைப்
பேணி சிறப்பாக வாழ்வோம்! சுகந்தரும் சுவனத்தில் சுதந்திரமாக நுழைவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக