வெள்ளி, 9 நவம்பர், 2012




சொர்க்கத்தின் இன்பங்கள்
எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் M. அன்வர்தீன்

சொர்க்கத்தின் உண்மைத் தன்மையை, அதில் நுழையாதவரை, மக்கள் அதைப் பற்றி எப்போதும் உணர்ந்த்து கொள்ள முடியாது. அல்லாஹ்தஆலா சொர்க்கத்தைப் பற்றி சொல்லும் போது, அது படைக்கப்பட்டதன் நோக்கம், அங்கே மக்கள் அனுபவிக்கக் கூடிய மட்டற்ற மகிழ்ச்சி எல்லாம் தற்போது வாழக் கூடிய வாழ்க்கையில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது என விவரிக்கிறான்.

மேலும், மனிதர்களுக்கு இறைவன் அளிக்கக்கூடிய  சொர்க்கத்தைப் பற்றியும் அதன் அருட் கொடைகளைப் பற்றியும், அதன் அழகைப் பற்றியும் குர்ஆன் கூறிக் கொண்டு இருகிறது. அது மறுமை வாழ்வுக்காக இறைவனால் தயார் படுத்தப்பட்டிருக்கின்றது என்றும், யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து வகையான நல்லவைகளும் அவர்களுக்கு உண்டு என்ற தகவலையும் சொல்கிறது.

மேலும் அது அனைத்து வகையான அருட்கொடைகளும் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர்களின் ஆன்மாக்கள்/இதயங்கள் விரும்பக்கூடிய அனைத்தும் கிடைக்கும் என்றும் அவர்களின் இதயங்களில் இருந்து கோபதாபங்கள், கவலைகள், மன வருத்தங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விடும் என்றும் சொல்கிறது. இறைவன் இதுபோன்ற ஒரு அருட்கொடையை உண்டாக்கி, மறுமை நாளில் தான் விரும்பக் கூடியவர்களுக்கு அளிப்பதற்காக தயாரித்து வைத்துள்ளான்.

சொர்க்கத்தின் மட்டற்ற மகிழ்ச்சி என்பது என்ன?  அது எவ்வாறு இந்த உலக மகிழ்ச்சியில் இருந்து வேறுபடுகிறது என்பது பற்றி ஒரு சில உதாரணங்ளோடு பார்ப்போம்.

வேதனை, துன்பம் இல்லாத மட்டற்ற மகிழ்ச்சி: -

மனிதர்கள் இந்த உலகத்தில் சந்தோஷம் அடைகின்ற அதே நேரத்தில், கடுமையான உழைப்பு மற்றும் வேதனையையும் அடைகின்றனர். ஒருவரின் இந்த உலக வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் அவர் அடைந்த சுகத்தை விட அடைந்த கஷ்டங்களின் அளவு கூடுதலாகத் தான் இருக்கும். ஆனால் மறுமை வாழ்க்கையைப் பொறுத்த வரையில் முழுமையான மகிழ்ச்சி, சந்தோஷத்தை தவிர கஷ்டங்களையோ, துன்பங்களையோ சிறிதும் அனுபவிக்க மாட்டார்கள். அனைத்து வகையான வேதனை, துன்பங்களும் மறு உலகத்தில் இல்லாமல் போய் விடும். இது சம்பந்தமாக ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

சொத்து சுகங்கள்: -

மனிதன் தான் சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதற்கு, அடிப்படை தேவையான பணம், ஆபரணங்கள், விலை உயர்ந்த கார் மற்றும் ஆடைகள், ஆடம்பர வீடுகள் போன்றவற்றை மாய வித்தைகள் செய்தாவது அடைய முயற்சிக்கிறான். மேலும் அதுதான் வாழ்க்கையின் வெற்றி என்றும், நினைக்கிறான். அதிகமான மக்களுக்கு வெற்றி என்பது சொத்து சுகங்களோடு சம்பந்தபட்டது என்று நினைக்கின்றனர். அது உண்மைக்கு புறமானதாக இருந்த போதிலும் மிகப்பெறும் செல்வந்தர்கள், எவ்வளவு துக்ககரமான வாழ்க்கையை கடைபிடித்துள்ளார்கள் என்று நாம் பல தடவைகள் பார்த்திருக்கிறோம். சில சமயம் அது அவர்களை தற்கொலையின் பக்கம் கூட இட்டுச் செல்கிறது. சொத்து என்பது, என்ன விலை கொடுத்தாவது அடையக்கூடிய, மனிதனின் இயற்கையான வேட்கை ஆகும். இந்த விருப்பம் பூர்த்தி அடையாத போது மனிதனை துன்பமடைய செய்கிறது. இந்த காரணத்தினால் தான் இறைவன் சொர்க்க வாசிகள், அவர்கள் கற்பனை செய்த அனைத்து வகையான சொத்து சுகங்களையும் பெறுவார்கள் என்று குர்ஆனில் கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும். இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன; இன்னும், ‘நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!’ (என அவர்களிடம் சொல்லப்படும்.) (அல்-குர்ஆன் 43:71)

‘சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்’ (என அவர்களுக்குக் கூறப்படும்). (அல்-குர்ஆன் 69:24)

அ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப் படும்,  ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்;  அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் – (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று; (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று. (அல்-குர்ஆன் 18:31)

நோயும் மரணமும்: -

இந்த உலக வாழ்க்கையில் உள்ள வேதனையில் ஒன்று தான், தான் விரும்பியவர்களின் நோயும் மரணமும்,  ஆனால் சுவர்க்கத்தில் இவை இரண்டுமே இல்லை. யாரும் நோய் வாய்ப்படவோ, துன்பப்படவோ மாட்டார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுவர்க்கத்தைப் பற்றி கூறும்போது: -

“அவர்கள் ஒருபோதும் நோய் வாய்ப்பட மாட்டார்கள், மூக்குச் சிந்தவோ எச்சில் துப்பவோ மாட்டார்கள்” (புகாரி)

சமுதாய உறவுகள்: -

சுவர்க்கவாசிகள், தீய மற்றும் வேதனை தரக் கூடிய விமர்சனங்களையோ பேச்சுக்களையோ ஒரு போதும் கேட்க மாட்டார்கள். அவர்கள் எப்போதும் அழகிய மற்றும் அமைதியான பேச்சுக்களையே கேட்பார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: -

அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள். ‘ஸலாம், ஸலாம்’ என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்). (அல்-குர்ஆன் 56:25-26)

தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்: ‘இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் – நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்’ (இதற்கு பதிலாக, ‘பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். (அல்-குர்ஆன் 7:43)

“சுவர்க்கத்திலே ஒருவருக்கொருவர் வெருப்புக்களோ, மனக்கசப்புக்களோ அடைய மாட்டார்கள். அவர்களுடைய இதயங்கள் ஒன்றுபோல இருக்கும். அவர்கள் இறைவனை காலையிலும்,  மாலையிலும் புகழ்ந்து கொண்டிருப்பார்கள்” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)

சுவர்க்கத்திலே அவர்கள் மிகச்சிறந்த தோழர்களோடு இருப்பார்கள்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் – இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். (அல்-குர்ஆன் 4:69)

சொர்க்கவாசிகளின் இதயங்கள் சுத்தமானதாகவும், அவர்களுடைய பேச்சுக்கள் அழகாகவும், அவர்களுடைய செயல்கள் சரியானதாகவும் இருக்கும். அங்கே தீங்கு தரக்கூடிய, வேதனை ஏற்படுத்தக் கூடிய, கோப மூட்டக் கூடிய பேச்சுக்கள் இருக்காது.

நிரத்தரமான மறுவாழ்வு: -

இந்த உலகத்தின் சுகபோகங்கள் நிலையற்றவை. ஆனால் மறு உலகத்தின் சுகங்களோ எப்போதும் நீடித்திருக்கிற, நிலையான ஒன்றாகும். இந்த உலகத்தில் மனிதன் அடையக்கூடிய சுகங்கள் சிறிது காலத்திற்கோ அல்லது சலிப்படையச் செய்யக் கூடியதாகவே உள்ளது. ஆகையால் வேறு ஒரு நல்ல சுகத்தை தேட முயற்சி செய்கிறான். ஆனால் மறு உலகத்தில் உள்ள சுகங்கள் எப்போதும் நிலைத்திருக்கிற, ஒருபோதும் சலிப்படையக் கூடியதாக இருக்காது.

அல்லாஹ் கூறுகிறான்: -

‘உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும்,  ஜக்காத்தை கொடுத்தும் வருவீர்களாக!’ என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட போது,  அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு ‘எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக:

‘இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.’ (அல்-குர்ஆன் 4:77)

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையானது – அதன் கீழே நீர் அருவிகள் (என்றென்றும்) ஓடிக் கொண்டிருக்கும். அதன் ஆகாரமும், அதன் நிழலும் நிலையானவை. இது தான் பயபக்தியுடையோரின் முடிவாகும். காஃபிர்களின் முடிவோ (நரக) நெருப்பேயாகும். (அல்-குர்ஆன் 13:35)

உங்களிடம் இருப்பவை எல்லாம் தீர்ந்துவிடும். அல்லாஹ்விடம் இருப்பதே (அழியாது என்றென்றும்) நிலைத்திருக்கும் – எவர்கள் பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (அல்-குர்ஆன் 16:96)

‘நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும். இதற்கு (என்றும்) முடிவே இராது’ (என்று அவர்களுக்குக் கூறப்படும்). (அல்-குர்ஆன் 38:54)

உன்னதமான மகிழ்ச்சி: -

சொர்க்கவாசிகளின் சந்தோஷங்களான, அவர்களின் உடைகள், உணவு, குடிபானங்கள், ஆபரணங்கள் மற்றும் மாளிகைகள் எல்லாம் மிக உன்னதமாக இருக்கும். அவற்றை இந்த உலகத்தோடு ஒப்பீடு செய்யவே முடியாது.

சொர்க்கத்தில் ஒருவர் தலை வைத்து வணங்கக் கூடிய இடமானது, இந்த உலகத்தில் சூரியன் உதிக்கும் எல்லா இடத்தையும் விட சிறந்ததாக உள்ளது என்று முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள். (மிஷ்காத்)

அசுத்தங்களில் இருந்து விலகி இருத்தல்: -

சொர்க்கம், இந்த உலகத்தின் அசுத்தங்களில் இருந்து மாறுபட்டிருக்கிறது. இந்த உலகத்தில் நாம் சாப்பிட்டாலோ அல்லது குடித்தாலோ அது தேவையில்லாத அசுத்தத்தை வெளியேற்றக் கூடியதாக இருக்கிறது. இந்த உலகத்தில் மதுபானம் குடித்தால் தன்னை மறந்து விடுவான். பெண்களுக்கு மாத விலக்காகிறது, குழந்தை பிறக்கிறது. அது அவர்களுக்கு வேதனையை உண்டாக்குகிறது. சொர்க்கமானது இது போன்ற மன நிம்மதியின்மையில் இருந்து வேறுபட்டுள்ளது.

சொர்க்கத்தில் மது: -

(அது) மிக்க வெண்மையானது அருந்துவோருக்கு மதுரமானது. அதில் கெடுதியும் இராது அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர். (அல்-குர்ஆன் 37:46-47)

சொர்க்கத்தில் தண்ணீர் மற்றும் பால்: –

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? (அல்-குர்ஆன் 47:15)

சொர்க்கத்தில் உள்ளவர்கள் அசுத்தங்களை எவ்வாறு வெளியாக்குவார்கள் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது: “அவர்களின் தோலின் வழியாக வியர்வை வெளியாகும் அது கஸ்தூரியின் வாசனையைப் போன்று இருக்கும். அனைவருடைய வயிரும் மெலிந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள் (இப்னு ஹப்பான்)

இங்கே சொல்லப்பட்ட உவமானங்கள் எல்லாம் நாம் சொர்க்கத்தின் தன்மையைப் பற்றி புரிந்து கொள்வதற்காக. ஆனால் அதன் உண்மையான சந்தோஷத்தை இறைவன் மறைத்து வைத்துள்ளான்.

“அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது” (அல்-குர்ஆன் 32:17)

சொர்க்கத்துக்கு உவமனம் ஏதுமில்லை: –

சொர்க்கத்தின் சந்தோஷங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது. நாம் எவ்வளவு தான் முன்னேறி இருந்தாலும், மனிதர்களால் அதைப்பற்றி அறிந்துகொள்ள முடியாது. பிரகாசிக்கும் விளக்குகள், நறுமனம் வீசும் தாவரங்கள், உயர்ந்த மாளிகைகள், ஓடக் கூடிய ஆறுகள், கனிந்த பழங்கள், அழகான மனைவி, அதிகமதிகமான உடைகள் அழகாக கட்டப்பட்ட உயர்ந்த வீடுகள் (இப்னு மாஜா)

சொர்க்கத்தின் வீடுகளைப்பற்றி முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது தங்கம், வெள்ளியிலான செங்கல், கஸ்தூரியின் கலவை, முத்து பவளங்களின் கற்கள், குங்குமபூவின் மணல் அதில் உள்ளே நுழைபவர் சந்தோஷத்தை தவிர வேறு எதுவும் அடையமாட்டார். இறப்பு என்பதே கிடையாது. அவர்களுடைய ஆடைகள் கிழிந்து போகாது எப்போதும் இளமையுடன் இருப்பார்கள். (அஹமது)

அல்லாஹ் கூறுகிறான்: -

அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர். (அல்-குர்ஆன் 76:20)

அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (அல்-குர்ஆன் 32:17) இறைவன் கூறியுள்ள விஷயங்கள் குறைந்தது தான். அவன் கூறாத விஷயங்கள் இன்னும் அதிகம் உள்ளது (முஸ்லிம்)

சுவர்க்கத்தில் நல்லவர்களுக்கான நீரோடை!

“நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு காஃபூராக (கற்பூராக) இருக்கும், (காஃபூர்) ஒரு சுனையாகும்; அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள். அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள்”

இத்தகைய நற்பேறுகளுக்கான காரணங்கள்!

அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும். மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். ‘உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக)! உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை’ (என்று அவர்கள் கூறுவர்). ‘எங்கள் இறைவனிடமிருந்து, (எங்கள்) முகங் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்’ (என்றும் கூறுவர்).

எனவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகச் செழுமையையும், மனமகிழ்வையும் அளிப்பான். மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.

இன்னும் பல நற்பேறுகள்!

அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்து) இருப்பார்கள்! சூரியனையோ, கடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள். மேலும், அதன் (மர) நிழல்கள், அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்; அன்றியும், அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும். (பானங்கள்) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் (கொண்டு) அவர்கள் மீது சுற்றிக் கொண்டு வரப்படும். (அவை பளிங்கல்ல) வெள்ளியினாலான, பளிங்கைப் போன்ற தெளிவான கிண்ணங்கள். அவற்றைத் தக்க அளவாக அமைத்திருப்பார்கள். மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.

‘ஸல்ஸபீல்’ என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது. இன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்! அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே அவர்களை நீர் எண்ணுவீர்.

அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர். அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்! இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர்! அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.

‘நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்! உங்களுடைய முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிற்று’ (என்று அவர்களிடம் கூறப்படும்)”   (அல்-குர்ஆன் 76:5-22)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக